இலங்கையின் நிர்வாக தலைநகரம்
கடந்த காலத்தில் இறைமை ஆட்சியில், கலாசார மற்றும் ஒற்றுமை உணர்வுகளில் இலக்கியம் மற்றும் கலைகளில் வெற்றிகொண்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே நகரம் 1985 பெப்ரவரி 06ஆம் திகதியிட்ட இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 1985 சனவரி 29ஆம் திகதி முதல் இலங்கையின் புதிய தலைநகரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
எல்லையும் நிலப்பரப்பும் - கோட்டே நகரம் வடக்கிலும் கிழக்கிலும் கொலொன்னாவ மற்றும் கடுவெல பிரதேச செயலக பிரிவுகளையும் தெற்கிலும் மேற்கிலும் மஹரகம மற்றும் திம்பிரிகஸ்யாய ஆகிய பிரதேச பிரிவுகளையும் எல்லைகளாகக் கொண்டுள்ளதோடு நிலப்பரப்பு சுமார் 1,674 ஹெக்டயாராகும்.
கொழும்பு நகரத்திற்கு சமீபமாக அமைந்திருப்பதும் அதன் உப நகர வலயமாகவும் இலங்கையின் பிரதான நிர்வாக தலைநகரமாகவும் புதிய பாராளுமன்ற கட்டிடத் தொகுதி இந்த தொகுதியில் அமைந்திருப்பதனாலும் தீவிர நகர மயமாகியுள்ளது. பிரதேசத்தில் உள்ள முன்னேற்றகரமான நெடுஞ்சாலை வலையமைப்பு மற்றும் வினைத்திறன்மிக்க உட்கட்டமைப்பு வசதிகள் என்பவற்றுடன் துரிதமாக அதிகரிக்கின்ற சேவை நிலையங்கள் காரணமாகவும் இந்த பிரதேசம் ஒரு கேந்திர ஸ்தானமாக மாறியுள்ளது.
சூழலியல் நிலை
ஸ்ரீ ஜயவர்தனபுர நகரத்தை மிக அழகான கண்கவரும் பல ஈர நிலப்பகுதிகளைக் கொண்டுள்ள பிரதேசமாக எடுத்துக்காட்ட முடியும். தற்கால நிலப் பயன்பாட்டின் பிரகாரம் 230 ஹெக்டயார் நிலப்பரப்பு ஈர நிலங்களாக எஞ்சியுள்ளது. இந்த சதுப்பு நிலத்தின் கோட்டே கால்வாய் (தியவன்னா ஒய) இருமருங்கிலும் கிழக்கில் நாவல (வெலிகட நுகேகொட) வீதி ஜயவர்தனபுர மாவத்தை தெற்கில், எத்துல்கோட்டே மேற்குப் பகுதி மற்றும் ஹீன் எலவின் சிற்சில பகுதிகள் வரை விரிந்து செல்கிறது.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே தலைநகரத்திற்கு கொண்டுவர தீர்மானித்ததை அடுத்து இந்தப் பிரதேசத்தின் சதுப்பு நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. பாராளுமன்ற கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தபோது அதில் தற்பொழுதுள்ள நிலம் நிரப்பப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டது. அத்துடன், அதைச் சுற்றியுள்ள பிரதேசம் நீர்த்தேக்கமாக நிர்மாணிக்கப்பட்டது. இவற்றிடையே பாராளுமன்ற கட்டிடத் தொகுதியை சுற்றியுள்ள நீர்த்தேக்கத்தற்கு எல்லைகளாகப் பரந்து விரிந்துள்ள வனப்பகுதியுடனான சதுப்பு நிலம், மேலதிக மழை நீரை தேக்கி வைக்கும் நிலப்பகுதியாக இருக்கிறது.
சதுப்பு நிலத்தில நகர மக்கள் குப்பைகூளங்களை குவிக்கின்றனர். அதன் விளைவாக நீண்டகாலமாக இந்த நிலங்கள் நிரப்பப்பட்டு வீடுகளைக் கட்டுவதற்கும் அகற்றுகின்ற குப்பைகள் கழிவுப் பொருட்கள் என்பவற்றை சேகரிக்கும் நிலமாகவும் பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தற்பொழுது சதுப்பு நிலம் என்பது சூழல் முறைமைகளுக்கிடையில் மிகவும் அச்சுறுத்தலுக்குள்ளான சூழல் முறைமை வகையைச் சேர்கிறது.
அடிப்படையாகப் பார்க்கும்போது, ஈர நிலத்திலும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் 3 பிரதான பயன்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவையாவன,
- ஈர நிலங்கள் அதிக மழை காலத்தில் மேலதிக நீரை தேக்கி வைத்துக்கொள்ளும் தற்காலிக நீர்த்தேக்கங்களாக செயற்படுகின்றன. இதன்மூலம் வெள்ளப் பெருக்கினால் சுற்றியுள்ள பிரதேசங்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் தவிர்க்கப்படுகிறது.
- வினைத்திறன்மிக்க கழிவுநீர் வழிந்தோடும் முறைமையொன்று இல்லாதபோது இந்த ஈர நிலம், அதைச் சுற்றி வாழ்கின்ற மக்கள் அகற்றுகின்ற கழிவுநீரை தேக்கிவைத்துக்கொள்ளும் பணியை நிறைவேற்றுகிறது.
- தற்பொழுது சதுப்பு நிலங்களை கட்டுப்பாடின்றி நிரப்பும் அச்சுறுத்தல் நிலவுகிறது. அத்துடன், தற்பொழுது இந்தப் பிரதேசம் பாரியளவில் வீடமைப்பு தொகுதிகளையும் சந்தை தொகுதிகளையும் நிர்மாணிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
வினைத்திறன்மிக்க முகாமைத்துவம் இன்மையால் தற்பொழுது கோட்டே நகரத்தில் உள்ள ஈர நிலங்களின் அளவு துரிதமாக குறைந்துகொண்டு வருகிறது. நகரத்தின் ஒருசில இடங்கள் ஏற்கனவே வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பது இதன் பாதகமான விளைவாகும்.
சனத் தொகை - கோட்டே நகர எல்லைக்கு உரிய 20 கிராம சேவையாளர் பிரிவுகளில் மொத்த சனத்தொகை 118,323 ஆகும். (2016 டிசம்பர் மாதத்தில்) தேசியத்துவத்தின் பிரகாரம் சிங்களவர் 84% தமிழர் 7% முஸ்லீம் 7% மற்றும் பறங்கியர் உள்ளிட்ட ஏனைய இனத்தவர்கள் 1% மாகும்.
- 18 வயதுக்கு குறைந்தவர்கள் - 38,705
- 18 - 55 வதுக்கு இடைப்பட்டோர் - 56,815
- 56 வயதுக்கு மேற்பட்டோர் - 22,803
அதிகமான மக்களின் பிரதான சீவனோபாயம் சேவை பிரிவை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதற்கு மேலதிகமாக கைத்தொழில் துறையிலும் கணிசமானளவு முன்னேற்றத்தைக் காண முடிகிறது. பிரதேசத்தில் விவசாயத்தில் ஈடுபடுகின்றவர்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றனர். அத்துடன், அவர்களும் முழுநேர விவசாயிகள் அல்ல. பகுதிநேர விவசாயிகளாக இருக்கின்றனர்.
தொல்பொருளியல் இடங்கள்
கோட்டை மதில்
அழகேஸ்வர சேனாதிபதியால் நகரத்தின் பாதுகாப்புக்காக நிர்மாணிக்கப்பட்ட கோட்டை மதில் சுமார் 8 அடி உயரமும் 30 அடி அகலமும் கொண்டுள்ளது. அன்று கோட்டேயை ஆண்ட மன்னர்களின் அறிவுறுத்தல்கள் பிரகாரம் நடைபெற்ற தலதா பெரஹரா இந்த கோட்டை மதில்மீது பயணித்ததாக நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்தில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியர் ஆட்சிக் காலங்களில் ஹெந்தல பாலம், கொழும்பு கோட்டை, புறக்கோட்டை மற்றும் புதுக்கடை போன்ற இடங்களில் அரசாங்கத்தின், இராணுவத்தின் மற்றும் தனியார் துறையின் கட்டிடங்களை அமைப்பதற்காக கோட்டை மதிலிலிருந்து கபொக் கற்கள் கொண்டுசெல்லப்பட்டன. தற்பொழுது எத்துல்கோட்டே கொட்டுபெம்ம பாதையில் ஆங்காங்கே புராதன கோட்டை மதிலின் மேற்கு பகுதியின் அழிவுச் சின்னங்களின் எஞ்சிய பகுதிகள் காணப்படுகின்றன. தொல்பொருளியல் திணைக்களம் இந்த இடங்களை தொல்பொருளியல் பாதுகாப்பிடமாக பெயர் குறிப்பிட்டுள்ளது.
தியவன்னா ஒய
கோட்டே நகருக்கு அற்புதமான அழகை தருகின்ற வரலாற்று முக்கியம்வாய்ந்த தியவன்னா ஒய இயற்கையன்னையின் அபூர்வமான சொத்தாகும். இந்த நீர்த்தேக்கத்தையும் அதைச் சுற்றி அமைந்துள்ள பூங்காக்களின் அழகைப்பற்றி கோட்டே யுகத்தில் எழுதப்பட்ட தூதுவிடு காவியங்களில் மிக அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது. தியோகோத எரச்சோ என்ற போர்த்துக்கீச படைவீரனுக்கும் வீதிய பண்டாரவின் மனைவியான சமுத்ர தேவிக்கும் தொடர்பு இருப்பதாகப் பரவிய வதந்தியால் ஆத்திரமடைந்த வீதிய பண்டார சமுத்ர தேவியை இந்த நதிக்கு பலியிட்டதாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.
அரச மாளிகை
அரச மாளிகையின் அழிவுச் சின்னங்கள் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவானது. அது 5 மாடி கட்டிடமாக இருந்தது. மாளிகையின் கோபுர உச்சி சுற்றியிருந்த கிராமங்களுக்கு மிக நன்றாகத் தென்பட்டுள்ளது. மாளிகைக்கு அருகிலேயே இராஜ குடும்பத்தில் திருமண தடாகம் இருந்திருக்கலாம் என நினைக்க முடியும். இற்றைக்கு சில காலங்களுக்கு முன்னர் இந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராச்சியின்போது மிகப் பெரிய குழிக்குள் அலங்கார வடிவமுள்ள அழகான சிற்பங்கள் செதுக்கப்பட்ட ஓடுகளும், மெருகூட்டப்பட்ட செங்கல் மற்றும் பெரகும்பா மன்னர் காலத்திற்குரிய பொற்காசுகளும் கண்டெடுக்கப்பட்டன. தொல்பொருளியல் திணைக்களம் இந்த வரலாற்று முக்கியம்வாய்ந்த இடத்தில் ஆராய்ச்சிசெய்யும் பொறுப்பை வகிக்கிறது. தற்பொழுது மாளிகா வீதி என்றழைக்கப்படுகின்ற பிரதேசத்தில் இது இருந்ததற்கு சாட்சியங்கள் உண்டு.
கல் அம்பலம்
பிட்டகோட்டே நகர மத்தியில் அமைந்துள்ள கல் அம்பலம் இலங்கையின் கட்டிடக்கலை மற்றும் தொழில்நுட்பம் பற்றி கவனம் செலுத்தும்போது முக்கிய இடம் வகிக்கிறது. இதன் கூரையின் அமைப்பு வடிவத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ளும்போது அது தற்கால கட்டிடக்கலை முறைக்கு பெரிதும் ஒத்திசைவதைக் காண முடிகிறது. அதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் உயர் மதிப்பை எடுத்துக்காட்டுகிறது. மேலும் கண்டி போன்ற யுகங்களில் நிர்மாணிக்கப்பட்ட அம்பலங்களின் உள்ளே உயர் சாதியினருக்காக தனி ஆசனங்கள் போடப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தாலும் பிட்டகோட்டே கல் அம்பலத்தில் அவ்வாறு சாதிகளுக்கு ஏற்ப ஆசனங்கள் போடப்பட்டதாக காணமுடியவில்லை. கோட்டே மன்னராட்சி காலத்தில் இனபேதம் குலபேதம் இன்றி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்ததற்கு இது சிறந்த உதாரணமாகும். இந்த அம்பலம் புராதன கோட்டே இராஜதானிக்குள் நுழைகின்ற பாதையில் அமைக்கப்பட்டுள்ள ஒன்றாகும். புராதன கோட்டே வரைபடத்திலும் இந்த இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியிலிருந்து வருகின்ற மக்கள் அத்துல்கோட்டேக்கு செல்லுவதற்காக தங்கியிருப்பதற்காக இது பயன்படுத்தப்பட்டுள்ளது. பிட்டகோட்டே நகரம் சனநெரிசல் மிக்கதானதை அடுத்து பல்வேறு மாற்றங்களுக்குள்ளான இந்த அம்பலத்திற்குள் கற்பாறை ரீதியான ஊடகம் பயன்படுத்தப்பட்ட தூண்கள் சிலவற்றை இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றது.
அலகேஸ்வர மயானம்
எத்துல்கோட்டே அழகேஸ்வர வீதியில் அமைந்துள்ள இந்த நிலம் தொல்பொருளியல் திணைக்களத்தின் பொறுப்பில் இருக்கின்றது. இந்த இடம் தொடர்பாக இரண்டு கருத்துக்கள் நிலவுகின்றன. இது அழகேஸ்வரனின் மயானம் என ஒரு கருத்து நிலவுகிறது. திறமையான பிரதேச ஆட்சியாளராக, சேனாதிபதியாக, சிறந்த படைப்பாளியாக இருந்த அழகேஸ்வரன் நாட்டை ஆளுவதுபற்றி கனவுகண்டுகொண்டிருந்தான். பலவந்தமாக நாட்டின் ஆட்சியைக் கைப்பற்ற முனைந்த அவனைக் கொலைசெய்து சடலத்தை அன்றைய பகிரவ தடாகத்தின் முதலைகளுக்கு இரையாக்கியதால் மயானத்தில் அடக்கம் செய்வதற்கு சடலம் மிஞ்சவில்லை. எனவே இந்த இடம் அழகேஸ்வரனின் மாளிகை என்பது இன்னொரு கருத்தாகும். இந்த இடத்தின் கட்டிடக்கலை நிர்மாணம் மற்றும் இங்கு தற்பொழுது கிடைத்துள்ள அரைவைக்கல், நீர் வடிகட்டி போன்ற மனை உபகரணங்களினால் இந்த இடம் அழகேஸ்வரனின் மாளிகை இருந்த இடம் என்பதற்கு அதிக சான்று கிடைத்துள்ளது.
வெஹெரகந்த மயானம்
1949ஆம் ஆண்டு தொல்பொருளியல் திணைக்களம் இந்த இடத்தில் மேற்கொண்ட அகழ்வாராச்சியின்போது 97 x 58 x 5½ அளவில் செங்கோண வடிவில் கட்டப்பட்டுள்ள பாரிய மேடைமீது கொற்ற வெஹெர வடிவத்தில் ஒன்றுக்கொன்று வேறுபட்ட இரண்டு ஸ்தூபிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கபொக் கற்களால் கட்டப்பட்டுள்ள பாரிய ஸ்தூபி 30 கன அடியையும் சிறிய ஸ்தூபி 24 கன அடியையும் கொண்டுள்ளது. இரண்டு ஸ்தூபிகளும் மூன்று ஆதார நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளதோடு வடக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் மேடைக்குள் பிரவேசிப்பதற்காக கபொக் கற்களால் அமைக்கப்பட்ட இரண்டு படிக்கட்டுகள் இருக்கின்றன. இது புராதன துறவிகள் மடம் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. ஆயினும் கலாநிதி செனரத் பரணவிதாரண அவர்களின் கருத்து இந்த ஸ்தூபிகள் நான்காம் பெரகும்பா மன்னனின் மற்றும் அவனுடைய மனைவியான ரண்மெனிகா அரசியின் கல்லறையாக இருக்கலாம் என்பதாகும்.
புராதன சுரங்க வாயில்
கோட்டே ஆனந்த சாஸ்த்ராலய பூமியில் இந்த சுரங்க வாயிலை காணக்கூடியதாகவுள்ளது. நிலமட்டத்திலிருந்து சுமார் 5 அடி தோண்டியதன் பின்னர் மத்தியில் மீதப்படுத்திக்கொண்ட மண் திட்டை தோண்டி இரண்டு கதவுகள் ஊடாக உள் நுழைவதற்கு அமைக்கப்பட்டுள்ளது. பிரதான வாயிலின் உச்சியில் சிங்கள மன்னனின் கிரீடம் செதுக்கப்பட்டுள்ளது. இதன் நடுவில் நுழைந்ததன் பின்னர் நான்கு கதவுகளில் கீழிறங்குவதற்கு வைக்கப்பட்டிருந்து. இதில் 03 கதவுகள் போலி கதவுகளாக வைக்கப்பட்டிருந்தது பாதுகாப்புக்காக எனக் குறிப்பிடப்படுகின்றது. போர்த்துக்கீசருடன் இடம்பெற்ற போரில் கைதுசெய்யப்பட்டு கொழும்பு கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருந்த வீதிய பண்டார இளவரசனை காப்பாற்றுவதற்காக அவனுடைய இரண்டாவது மனைவியான மாயாதுன்னவின் மகள் டிக்கிரி இளவரசி மத்துரட்ட பிரதேசத்திலிருந்து அழைத்துவரப்பட்ட கலைஞர்களைக் கொண்டு இந்த சுரங்கத்தை அமைத்ததாக குறிப்பிடப்படுகின்றது. மிக அண்மையில் தொல்பொருளியில் திணைக்களம் மேற்கொண்ட அகழ்வாராச்சியின்போது இந்த இடத்தில் தனி கபொக் கல்லினால் நிர்மாணிக்கப்பட்ட தாதுகோபுரமும் படிக்கட்டும் கிடைத்துள்ளது.
கோட்டே ரஜமகா விஹாரை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாகமரம்
15ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ ஜயவர்தனபுரவை இராஜதானியாக்கி நாட்டை ஐக்கியப்படுத்தி இலங்கையை மிளிரச்செய்த 6ஆம் பெரகும்பா மன்னனால் கோட்டே ரஜ மகா விஹாரை கட்டப்பட்டது. அந்தரகம பண்டார ராஜகுருவினால் எழுதப்பட்ட நம்பொத்த எனும் விஹாரை செய்தியில் கோட்டே ரஜ மகா விஹாரை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள சயன சிலைகூடம் என்பது கோட்டே ரஜ மகா விஹாரை பூமியில் 6ஆம் பெரகும்பா மன்னனால் செய்விக்கப்பட்ட சயன சிலையுடனான விஹாரையாகும். அந் நூலிலேயே குறிப்பிடப்பட்டுள்ள சண்முக கோயில் அமைந்திருப்பது விஹாரையின் முன்பக்கத்திலாகும். அதுவும் 6ஆம் பெரகும்பா மன்னனால் செய்விக்கப்பட்டதாகும். போர்த்துக்கீசரின் முற்றுகையால் இந்த விஹாரை அழிவடைந்ததன் பின்னர் 1813ஆம் ஆண்டில் கௌரவ பிலானே தலைமை தேரர் அவர்களால் இந்த ரஜ மகா விஹாரையின் அழிவுச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின்னர் விஹாரை புனரமைக்கப்பட்டதை அடுத்து படிப்படியாக முன்னேறி இன்று இலங்கையில் பிரதான விஹாரையாக இருக்கின்றது. இங்கு எழுந்தருளியுள்ள தலதா பெருமானுக்கு பூஜைசெய்யும் பொருட்டு 1901ஆம் ஆண்டு கோட்டே ஸ்ரீ தலதா பெரஹரா மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு இற்றைவரை மிக கோலாகலமாக நடத்தப்படுகின்றது. இந்த புண்ணியஸ்தலத்தில் காணப்படுகின்ற மிகப் புராதன நாகமரம் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கிறது. செண்பகப் பெருமாள் யாழ்ப்பாண போருக்கு போவதற்கு முன்னர் இந்த தலத்தில் நேர்ந்துகொண்டதாகவும் யாழ்ப்பாணத்தை வெற்றிகொண்டதன் பின்னர் திரும்பி கோட்டேக்கு வந்த செண்பகப் பெருமாள் அவருடைய திருமண வாளை இந்த தலத்தில் புதைத்து அதில் ஆலயமொன்றை அமைத்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
கோட்டே தொல்பொருளியல் அரும்பொருட்காட்சியகம்
நுகேகொட கொட்டாஞ்சேனை பேருந்து நெடுஞ் சாலையில் (பாதை இலக்கம் 168) கொட்டுபெம்ம சாலையிலிருந்து நுகேகொடை நோக்கி சுமார் 50 மீற்றர் தூரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது. இதில் இராஜதானிக்கு சொந்தமான புராதன பொருட்கள், கருவிகள், பயன்படுத்தப்பட்ட ஆடைகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட பணம் போன்றவை பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அரும்பொருட்காட்சியகத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள காட்சியகம் மிகவும் பழமைவாய்ந்த ஒன்றாக இருக்கின்ற அதேவேளையில், அது இலங்கையின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய ஈ.டப்ளியு.பெரேரா வாழ்ந்த இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.
அரச பாடசாலைகள்
கோட்டே நகரத்தில் அமைந்துள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 19 ஆகும். இவற்றில் இராஜகிரிய ஜனாதிபதி வித்தியாலயம், கோட்டே ஆனந்த சாஸ்திராலயம் மற்றும் நுகேகொட அனுலா மகளிர் வித்தியாலயம் என்பவை தேசிய பாடசாலைகளாக இருப்பதோடு, ஹேவாவிதாரண வித்தியாலயம், சிறிஹத வித்தியாலயம், ஸ்ரீ சோபித்த வித்தியாயலயம், ஸ்ரீ பெரகும்பா மகா வித்தியாலயம், இந்து வித்தியாலயம், சமுத்ரதேவி மகளிர் வித்தியாலயம், ஆனந்தா மகளிர் வித்தியாலயம், அனுலா ஆரம்ப வித்தியாலயம், ஜனாதிபதி மாதிரி ஆரம்ப வித்தியாலயம், ஜனாதிபதி மகளிர் வித்தியாலயம், ஸ்ரீ ஜயவர்தனபுர மகா வித்தியாலயம், ஸ்ரீ ஜயவர்தனபுர மகளிர் வித்தியாலயம், புனித தோமஸ் வித்தியாலயம், ஸ்ரீ ரேவத றோயல் கல்லூரி, ஸ்ரீ விஜயராம வித்தியாலயம் என்பவை ஏனைய பாடசாலைகளாகும்.
இவ்வனைத்து பாடசாலைகளிலும் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 22008 ஆக இருப்பதோடு சேவையாற்றுகின்ற மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 1206 ஆகும்.